SHARE

நான்காது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் நகரில் இன்று நடைபெற்றது.

கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமான இந்நிகழ்வின் தொடர்ச்சியான 3 ஆவதும் இறுதியுமான நிகழ்வே இன்று ஞாயிற்றுக்கிழமை ஒக்ஸ்பேட்டில் அமைந்துள்ள உலகத்தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்றது.

உலகத்தமிழர் வரலாற்று மையம் மற்றும் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் இணைந்து பிரமாண்டமாக முன்னெடுத்த இந்நிகழ்வின் இறுதி நாளாகிய இன்று சர்வதேச ரீதியாக நிகழ்வில் கலந்து கொண்டிருந்த பேராளர்கள், கல்விமான்கள், தொழில் சார் நிபுணர்கள், மற்றும் உறவுகள் அனைவரும், 1974ம் ஆண்டின் நினைவுகளை மீட்கும் வகையில் தமிழரின் பண்பாட்டு வடிவங்களான பறை இசை, சிலம்பம், இன்னியம், காவடிகளின் அணிவகுப்புடன்சி றப்பாக அமைக்கப்பட்டு இருந்த உயிர்க்கொடை உத்தமர்களின் நினைவு தூபியின் மாதிரி வடிவத்தினை நோக்கி அழைத்து வரப்பட்டனர்.

அங்கு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு, நினைவுத்தூவிக்கும் 10.01.1974 அன்று படுகொலை செய்யப்பட்டு திருவுருவ படங்களாக வைக்கப்பட்டிருந்த, உயிர் கொடை உத்தமர்களின் நினைவுகளுடன் மலர் வணக்கங்களும் ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வுகளும் நடைபெற்றது.

தொடர்ந்து மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் மாதாந்த வணக்க நிகழ்வு நடைபெற்றது. போராட்ட காலத்தில் யூன் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களையும் அக்காலப்பகுதியில் இனப்படுகொலை செய்யப்பட்ட பொது மக்களையும், குறிப்பாக 04.06.2024 அன்று பிரான்சில் சாவடைந்த மூத்த போராளி விநாயகம் மற்றும் 16.06.2024 அன்று தாயகத்தில் சாவடைந்த வைத்திய கலாநிதி மாமனிதர் ஜெயகுலராஜா ஆகியோருக்குமான ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் நடைபெற்றது.

தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பெருமண்டபத்தில் நிகழ்வுகள் பேராளர்களின் திருவிளக்கு ஏற்றலுடன் ஆரம்பமாகியது. ஆசியுரையினை அருட்சுனைஞர் முருகுதிரி சிறிரஞ்சன் வழங்க, வரவேற்புரையினை ஆலோசகர் திரு.பாலகிருஸ்ணன் ஆசிரியர் வழங்கினார். தலைமை உரைகளை உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் வழக்கறிஞர் திரு.அமுது இளஞ்செழியனும் வைத்திய கலாநிதியும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பேராளரான பூலோகநாதன் அவர்களும் வழங்கினர். தொடர்ந்து நோக்க உரையினை நிகழ்வு ஏற்பாட்டு குழு இணைப்பாளர் திரு. அகிலன் வழங்கினார்.

தமிழ் தாய் வாழ்த்து பாடல்களை யாழிசை கலையக மாணவிகள் வழங்க, தமிழ் வணக்க நடனங்களை சிவலாய மாணவிகள், சிவதர்மி நர்த்தனாயல மாணவிகளும், சௌத்தென்ட் முத்தமிழ் மாணவிகளும் வழங்கியிருந்தனர்.

இன்னிய அணிவகுப்பினை சவுத்என்ட் முத்தமிழ் மன்ற மாணவர்கள் வழங்க, பறை இசையினையும் சிலம்பத்தினையும் நாம் தமிழர் பண்பாட்டு மீட்சி பாசறையினரும் வீரத்தமிழர் முத்தமிழ் மன்றத்தினரும் வழங்க, காவடியினை தமிழ் சோலை (Dunstable) பாடசாலை மாணவர்கள் வழங்கியிருந்தார்கள்.

சத்தியவான் சாவித்திரி நாட்டு கூத்தினை சௌத்தென்ட் முத்தமிழ் மாணவர்கள் வழங்க, கூத்து வழி தமிழ் வணக்கத்தினை மெய்வெளி அரங்க மாணவர்கள் வழங்கினர்.

சிறப்புரைகளை தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழருவி சிவகுமார், தமிழகத்தில் இருந்து வருகை தந்திருந்த மொழி பேரறிஞர் தக்கார் மாசோ விக்டர், நாம் தமிழர் பண்பாட்டு மீட்சி பாசறையின் இணைப்பாளர் பேராசிரியர் திரு.செந்தில்நாதன், அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த, 1974 ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டினை தலைமை ஏற்று நடத்திய பேராசிரியர் சு.வித்தியானந்தனின் மகள் திருமதி.செல்வி இராஐதுரை, சுவிஸ் நாட்டில் இருந்து வருகை தந்த எழுத்தாளர் திருமதி.மதிவதனி, பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த உலக தமிழப் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பிய தலைவர் திரு.மைக்கல் கொலின்ஸ், தமிழ் தேசிய செயற்பாட்டளரும் சைவநெறி அறிஞருமான முருகானந்தம், இளையவன் செல்வன் அன்பு, மலேசியாவில் இருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் குணபதி ஆறுமுகம் உட்பட பலர் வழங்கியிருந்தனர்.

மெய்வெளி அரங்கத்தினர் வழங்கிய “மரணத்தை விட கொடியது ” என்னும் அரங்க ஆற்றுகை மிகவும் உணர்வுபூர்வமாகவும், இன்றைய காலத்தின் யாதார்த்தினை சுட்டி காட்டுவதாகவும் அமைந்திருந்தது.

எதிர்வரும் காலத்தில் ஐரோப்பாவில் நடக்கவிருக்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டினினை பிரித்தானியா ஓக்ஸ்போர்ட்டில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறும் என்பதனை
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஐரோப்பாவுக்கான தலைவர் திரு.மைக்கல் கொலின்ஸ் அவர்களினால் அறிவிக்கப்பட்டது.

மேலும் உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மேலாண்மைப் பணிப்பாளர் திரு.வசந்தன் 50வது ஆண்டு “உயிர் கொடை உத்தமர்களின்” நினைவு நாள் மலரை வெளியிட்டு வைத்தார். அத்துடன் உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் கட்டப்பட இருக்கும் “தமிழ் இல்ல” கட்டுமானத்துக்கான இணைய வழி நிதி சேகரிப்புக்கான பொறி முறையும் வெளியிட ப்பட்டு வைக்கப்பட்டது. தமிழர் தகவல் மன்றத்தின் ( TIC) இலங்கை தீவில் தமிழர்களின் தொன்மையும் வரலாற்றினையும் உள்ளடக்கியதாக தமிழீழ நிழல் அரசாங்கத்தின் மாதிரி கண்காட்சி மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

சம நேரத்தில் நிகழ்வில் கலந்து கொண்ட பேராளர்களுக்கான மதிப்பளித்தலும், நிகழ்வுகளில் பங்கு கொண்ட மாணவ மாணவிகளுக்கான மதிப்பளித்தலும் அவ் அரங்கத்திலேயே நடைபெற்றது. ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் சங்கமத்துடன் குறிப்பாக பெருமளவு இளையோர்களின் பங்களிப்புடன் “உயிர் கொடை உத்தமர்கள்” நினைவு நாள் நிகழ்வுகள் பல்வேறு நினைவுகளுடனும் உணர்வுகளுடனும் நடந்தேறியது.

தமிழ் மொழியின் தொன்மையை காக்கவும் அதன் சிறப்பை உலகறியச் செய்யவும் தமிழர்களின் கலை கலாச்சார விழுமியங்களை பேணிக்காக்கவும் பல்மொழிப்புலமை கொண்ட வணபிதா சேவியர் தனிநாயகம் அடிகளாரால் 1966 ஆம் ஆண்டு உலகத் தமிழராய்ச்சி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியான 1974 ஆம் ஆண்டு 4 ஆவது தமிழாராய்ச்சி மாநாடு இலங்கையில் நடைபெற்றது. ஆனால் அந்த 4 ஆவது தமிழராய்ச்சி மாநாடு பெரும் கலேபரத்துடனும் 11 பேரின் படுகொலையுடனுமே நிறைவுக்கு வந்தது.

4 ஆவது தமிழாராய்ச்சி மாநாட்டிற்காக யாழ்ப்பானமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீதிகள் எங்கும் வாழைமரங்களும் தோறணங்களும் மின் விளக்கு அலங்காரங்களும் மிளிர யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மாநாடு வைபவ ரீதியாக ஜனவரி 3 ஆம் திகதி வண.சேவியர் தனிநாயகம் அடிகளாரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மாநாட்டின் ஆய்வு அமர்வுகள் வீரசிங்கம் மண்டபத்திலும் யாழ். றிமர் மண்டபத்திலும் சிறப்புற நடைபெற அதன் கலை நிகழ்ச்சிகள் யாழ். திறந்தவெளி அரங்கிலும் தமிழர் பண்பாட்டுப் பொருட்காட்சி யாழ். சுண்டிக்குளி மகளிர் கல்லூரியிலும் நடைபெற்றன.

இவ்வாறு பெரு விழாக்கோலமாக நடைபெற்று வந்த மாநாட்டின் நிறைவு நாளான ஜனவரி 10 ஆம் திகதி பரிசளிப்பு விழாவும் விருந்தினருக்கான உபசார நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையிலேயே சிங்கள் காவல்துறையினரும் அவர்களின் ஒத்துழைப்புடனான குண்டர்களும் இணைந்து மாநாட்டில் கூடியிருந்தவர்களை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். மாணவர்கள் ஆசிரியர் வைத்தியர் ஆகியோரும் அப்பதினொரு பேரில் அடங்குவர்.

Print Friendly, PDF & Email