SHARE

பிரித்தானிய எதிர்க்கட்சி, தொழிலாளர் கட்சியின் தலைவர் Hon. Sir Keir Starmer KCB KC MP

இலங்கையில் சமாதானம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு சர்வதேச அமைப்புக்களுடனும் தமிழ் சமூகங்களுடனும் தோளோடு தோள் நின்று தொழிற்கட்சி அரசாங்கம் செயற்படும் என பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவரும் தொழிலாளர் கட்சியின் தலைவருமான Hon. Sir Keir Starmer KCB KC MP தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா மற்றும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்று பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்களின் அறுவடைத் திருநாளான தைப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். அறுவடைத் திருநாள் ஏராளமான ஆசீர்வாதங்களையும் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும். செழுமையான தமிழ் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் இந்த சிறப்பு பண்டிகையினை நாம் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் ஒற்றுமையுடனும் நன்றியுணர்வுடன் ஒன்றுகூடி கொண்டாடுவோம்.

எமது நாட்டின் சமூக பொருளாதார மற்றும் கலாசார கட்டமைப்பிற்கு பிரித்தானிய தமிழ் சமூகம் ஆற்றிய பல பங்களிப்புகளிற்கு இச்சந்தர்ப்பத்தில் நான் நன்றி தெரிவிக்கின்றேன். கல்வி, மருத்துவம், வணிகம், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் அவர்களின் பங்களிப்புகள் எமது சமூகத்தையும் எமது நாட்டையும் வலிமையாக்கியுள்ளன. உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் தமிழ் மாணவர்களின் கடின உழைப்புக்கும் வெற்றிக்கும் சிறப்பு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கையில் சுயநிர்ணயம் சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் ஆற்றிய தியாகங்களை நாம் நினைவுகூர வேண்டிய தருணம் இதுவாகும். நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் இனியும் தாமதிக்காது செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்கட்சியானது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். மேலும் இலங்கையில் சமாதானம் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்கு எமது சர்வதேச அமைப்புக்களுடனும் தமிழ் சமூகங்களுடனும் தோளோடு தோள் நின்று தொழிற்கட்சி அரசாங்கம் செயற்படும்.

தொழிலாளர் கட்சியின் சார்பாக அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான தைப் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email