SHARE

டேவிட் சிம்மண்ட்ஸ் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பு

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் ரூயிஸ்லிப், நார்த்வுட் மற்றும் பின்னர் (Ruislip, Northwood and Pinner) பகுதி பாராளுமன்ற உறுப்பினர் டேவிட் சிம்மண்ட்ஸ் எம்.பி (Hon David Simmonds MP) அவர்களுடன் இராஜதந்திர சந்திப்பு ஒன்று திங்கட்கிழமை (20/11/2023) காலை 10.15 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமைசெயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில், பழமைமைவாவாதக்கட்சிக்காகான தமிழர்கள் அமைமைப்பின் (British Tamil Conservatives – BTC) செயலாளர் திரு. கஜன் ராஜ் அவர்களும், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமாக சர்வதேச மையத்தின் (ICPPG) சார்பில் திரு. றோய் ஐக்‌ஷான் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் இனப்படுகொலையின் நேரடி சாட்சியங்கள் மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களான திரு. கங்காதரன் திலக்ஷன், திரு. மோகனதர்ஷன் நாகநாதன், மற்றும் திரு. ஸ்ரீபன் நாகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டு, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலைக்கு வரலாற்று ரீதியாக பிரித்தானியாவே பொறுப்பு என்பதை விளக்கி, தமிழ்மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய கடமைப்பாட்டையும் எடுத்துரைத்தார். ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு (FCDO) போதுமான ஆதாரங்களை சமர்பித்த போதும் இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள்கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடிசாட்சி என்றும்தெரிவித்தார்.

சவேந்திர சில்வா யுத்தகுற்றங்களில் ஈடுபட்டிருப்பதை
ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் குறிப்படப்பட்டிருப்பதையும், அவர்மீது ஏற்கனவே அமெரிக்கா, கனடா பயணத்தடை விதித்துள்ளதையும் எடுத்துக்காட்டிய அவர், அமெரிக்கா, கனடாவின் வழியை பின்பற்றி பிரித்தானியாவும் தடை விதிக்கவேண்டும் என்று கோரி பிரித்தானிய புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர் என்பதையும் விவரித்தார்.

அடுத்து உரையாற்றிய திரு. கஜன்ராஜ் அவர்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்வதற்கு இதுவரை 50ற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், தற்போதைய பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு எதிராக தடை விதிக்க தயக்கம் காண்பிப்பது மிகவும் ஏமாற்றம் தருகிறது என்றும் இலங்கை யுத்த குற்றவாளிகளை தடைசெய்வது தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான மதிப்பிற்குரிய பொப் பிளக்மன் (Hon. Bob Blackman MP) ஒரு பாராளுமன்ற உறுப்பினர் குழுவை தாங்கள் உருவாக்கியுள்ளதாகவும், அதனில் இணைந்து செயற்படும்படியும் கேட்டுக்கொண்டார்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் தனது சந்தேகங்களை கேட்டு தெளிவடைந்துடன், ஈழத் தமிழர்களின் கோரிக்கையையும் ஆதங்கத்தையும், தனது பகுதியில் வாழும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தான் பிரித்தானிய அரசிற்கு எடுத்துரைப்பதாகவும், FCDO இதுவரை நடவடிக்கை எடுக்காமைக்கு காரணத்தை கேட்டு கடிதம் அனுப்புவதாகவும் வாக்களித்தார். அந்துடன் திரு. கீத் குலசேகரம் கேட்டுக்கொண்டபடி தமிழருக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு (APPGT) மற்றும் மக்நெட்ஸ்கை தடைகளுக்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற குழுக்களில் (APPG for Magnitsky Sanctions) இணையவும், FCDO விற்கு தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடைசெய்யக் கோரி தன்னாலான வகையில் அழுத்தம் கொடுப்பதாகவும் வாக்களித்தார்.

Print Friendly, PDF & Email