SHARE

நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடமும் இலங்கை கிரிக்கெட் சபையிடமும் ஜனாதிபதி உரிய விளக்கத்தைக் கோர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

எமது நாட்டின் கிரிக்கெட் நிர்வாகத்தில் காணப்படும் குழப்பங்களே இதற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் நாட்டில் நடைபெற்ற ஐ.சி.சி.யின் 5 கிரிக்கெட் தொடர்களும் இடைக்கால கட்டுப்பாட்டுக் குழுவின் நிர்வாகத்தின் கீழ் தான் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில், 2000 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், 2002 ஆம் ஆண்டு செம்பியன் கிண்ணத் தொடர், 2006 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடர், 2012 ஆம் ஆண்டு டி- 20 தொடர் என்பன இடைக்கால கட்டுப்பாட்டுக் குழு நிர்வாகத்தின் கீழ் தான் நாட்டில் இடம்பெற்றன.

எனவே, விளையாட்டுத் துறை அமைச்சரும், ஜனாதிபதியும் இதுதொடர்பாக கேள்வி எழுப்ப வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் சபையிடமும், ஐ.சி.சியிடமும் இது தொடர்பான விளக்கத்தை கோர வேண்டும்.

எப்படி இந்தத் தரப்பினர் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எமது நாட்டில் நடைபெறவிருந்த தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்ற முடியும்?

அத்தோடு, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர், இதன் ஊடாக தேசத்துரோக செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email