SHARE

மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின்போது ஊடகங்கள் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஆவணப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. குற்ற வழக்குகளிலே இவை தான் சாட்சியம். சாட்சியத்தை பெற்று நீதிமன்றத்தின் முன்பாக வைக்கும் வரை ஆவணங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டது என்பதிலே சிறிய தவறேதும் ஏற்பட்டால் அது குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு மிகப்பெரிய அளவிலே உதவுகின்ற ஒரு விடயமாக மாறும்.

அந்தவகையிலே எந்தவிதமான ஒளிவுமறைவின்றி காத்திரமான விடயங்களை தேடி ஆவணப்படுத்தல் அத்தியாவசியம் என அனைவரும் எதிர்பார்க்கின்றோம்.

இன்றையதினம் புதைகுழி அகழ்வுகள் நடைபெறுகின்ற போது அதனை ஆவணப்படுத்துவதனை தடுத்திருக்கிறார்கள்.

வேலை தொடங்க முதலும், மதியம் ஓய்வு பெறுகின்ற போதும், மாலை முடிவடைந்த போதும் படங்கள் எடுக்க அனுமதித்திருக்கிறார்களே தவிர சாட்சியங்களை சேகரிப்பதற்குரிய முறைகள் சரியாக நடைபெறுகின்றதா? இல்லையா? என்பதனை உலகத்திற்கு அதனை ஆவணப்படுத்துவதற்கு ஊடகங்களுக்கு அனுமதி கிடையாது.

புதைகுழிகள் கண்டறியப்பட்ட காலப்பகுதியில் இருந்தே கணிசமான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையிலே ஊடகங்கள் செய்திகளை வெளியே கொண்டுவந்ததனால் கணிசமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டதனால் தான் அக்கறை எடுக்கிற அளவிற்கு தெரிய கூடியதாக இருக்கின்றது.

இருப்பினும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பது சந்தேகத்தையும், ஏமாற்றத்தையும் கொடுக்கின்ற ஒரு விடயமாகவே இருக்கின்றது.

அகழ்வதனை பாதுகாப்பாக நீதிமன்றம் வரை ஆவணப்படுத்தி எந்தவித உடைவுகளும் இல்லாமல் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிப்பதுடன் அதேநேரம் அகழ்வு நடைபெற்றதன் பின்னர் ஆய்வு செய்யும் பணி உண்மையில் அனைத்து தரப்பினர்களும் விஷேடமாக பாதிக்கப்பட்ட தரப்புகள் நம்பிக்கையை கொடுக்க கூடிய வகையில் அமைய வேண்டும் என்பது முக்கியமான ஒரு கோரிக்கை” என அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email