SHARE

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகத்துறையைக் கட்டுப்படுத்தி, ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்யவே அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

எதிர்க்கிட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தெர்டர்பாக கருத்துத் தெரிவித்த அவர், “அரசாங்கமானது ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

அந்தவகையில், ஒளிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சட்டமூலத்தை கொண்டுவர தற்போது நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதன் ஊடாக ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகத்துறையை கட்டுப்படுத்தி, ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்யவே அரசாங்கம் முயல்கின்றது.

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் 6 மாதங்களுக்கு மட்டுமே அலைவரிசைக்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படும்.

வருடாந்திர அனுமதிப்பத்திரம் பெற வேண்டுமெனில், குறித்த அலைவரிசையானது அரசாங்கத்திற்கு சார்பானதா அல்லது மத்தியஸ்தமாக செயற்படுகிறதா என்பது ஆராயப்படும்.

இதனால் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அரச அனுசரணையுடன் அரசாங்கத்திற்கு சார்பான செய்திகளை மட்டும் மக்களுக்கு வழங்க வேண்டும் என்றே அரசாங்கம் இந்த சட்டத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்க்கட்சிகள் அனைவரும் இதற்கெதிராக ஒன்றிணைந்து, அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டை தோற்கடிக்க வேண்டும்.

விரைவிலேயே நாம் இந்த ஏகாதிபத்திய நடவடிக்கையை நீதிமன்றின் ஊடாக தோற்கடிப்போம்.

நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்வோம்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email