SHARE

வவுனியா, நெடுங்கேணி – வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி முழுமையானதொரு அறிக்கையை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தான் வவுனியா, வெடுக்குநாறி மலைக்கு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது சேதமாக்கப்பட்ட சிலை மீள் பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் சிலை உடைத்து வீசப்பட்டுள்ளன.

அதேபோன்று விக்கிரகங்களும் மாயமாகியுள்ள சம்பவத்தை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த பின்னர் தானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உரிய விசாரணைகளை முன்னெடுத்து, சட்டத்தை செயற்படுத்துமாறு ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email