SHARE

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விக்கிரகங்கள் உடைத்து அழிக்கப்பட்டமைக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினரால் வவுனியா பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (27) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் நிர்வாகத்தினர்,

”எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் அழிக்கப்பட்டமை மூலம் பௌத்த ஆக்கிரமிப்பின் வெளிப்பாட்டை அனைவரும் உணர்ந்து கொள்ள முடியும். இந்த துன்பியல் சம்பவம் எமக்கு மிகுந்த வேதனை அளிப்பதுடன் இவ்வாறான செயலை செய்தவர்களுக்கு எமது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆலயத்திற்குள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களத்தால் எமக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த திணைக்களத்தின் வாகனங்களே அங்கு தொடர்ச்சியாக சென்று வந்தது.

எனவே இந்தச்சம்பவத்தின் பின்னணி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்தின் மீதே நாம் சந்தேகம் கொள்கின்றோம். மனித உரிமை ஆணைக்குழுவிலும் அவர்களுக்கு எதிராகவே எமது முறைப்பாட்டை பதிவு செய்திருக்கின்றோம்.

முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட மனித உரிமை ஆணைக்குழுவினர், நாளை (28) வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்திற்கு பயணம் செய்து நிலமைகளை பார்வையிட வருவதாக” இதன்போது மனித உரிமை ஆணைக்குழுவினர் தெரிவித்தனர்.

இதேவேளை, விக்கிரகங்கள் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பாக நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திலும் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email