SHARE
அதிகாலை இருண்டுபோகும்படி
வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில்
உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர்
தகர்க்கப்பட்ட வெண்சொற்கள்
தோரணங்களாய் தொங்கும் நகரில்
சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம்
முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில்
சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான
முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள்
நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்களுக்கு
கைலாகு கொடுத்து
விரிந்த மலர்கொத்துக்களைபோல்
புன்னகையை நீட்டியவனின் உதடுகளை
மூடிக் கிடந்தது ஈரமண்
முள்முருக்கில் அமர்ந்திருந்த
வெண்புறா எழுந்து பறந்தது
கொடும் சிங்கத்தின் முகத்துடன்
இறகுகள் முறிக்கப்பட்ட புலுனி வீழ்ந்தது
நாவல் மரத்திலிருந்து
அமைதித் தாகத்தின்
புன்னகையடர்ந்த அவன் முகத்தின்
ஒரு துளி மௌனத்தில்
தோற்கும் உம் அறம் பிழைத்த போர்.

-தீபச்செல்வன்

Print Friendly, PDF & Email