SHARE

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்ததுடன், மாவீரர் பண்டிதரின் தாயாரினால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து,திலீபனின் உருவப்படத்திற்கு மாவீரர்களின் பெற்றோரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக்களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.

இதேவேளை முன்னதாக தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நல்லூர் வடக்கு வீதியில் மாவீரர் தமிழீழவனின் தாயாரால் ஈகைச் சுடரேற்றப்பட்டு அஞ்சலிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email