SHARE

குருநாகல் யக்கஹபிட்டியவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் பொதுமகனை தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகியதையடுத்து, சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தினரால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவ அதிகாரி ஒருவர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதுடன், பொதுமகனை தாக்கிய அதிகாரி இலங்கை இராணுவத்தின் லெப்.கேணல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக இராணுவம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார் என ஆங்கில ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஒரு குழு  எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த குழு வேண்டுமென்றே எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மையை உருவாக்கி மோதலுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email