SHARE

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைத் தொடரந்து அவர்களின் உறவுகளும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அரசியல் கைதிகள் இன்று (புதன்கிழமை) அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.

இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன், பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கரும்புலிகள் தினத்தை நினைவு கூர முயன்றமை மற்றும் தீய செயல்களைச் ஏற்படுத்தும் பொருட்டு வெடிபொருள் தயாரிப்புக்கு உதவியமை போன்ற குற்றச்சாட்டில் இரத்தினசிங்கம் கமலாகரன், வைத்தியலிங்கம் நிர்மலன், நல்லதம்பி நகுலேஸ்வரி, பத்மநாதன் ஐங்கரன் ஆகியோர் கடந்த 2020 ஆம் ஆண்டு 07 ஆம் மாதம் 3 மற்றும் 06 ஆம் திகதிகளிலும், 2021 ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் 28 ஆம்  திகதியிலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  சிறைக் கைதிகளின் உறவினர்கள் கைதிகளுக்கு ஆதரவாக வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகிறனர்.

மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email