SHARE

– ஐ.நா. ஆணையாளரிடம் உறவுகள் கோரிக்கை

தமது உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை போராடிய 112 பெற்றோர்கள் மனஅழுத்தத்தினாலும் நோய்வாய்ப்பட்டதாலும் மரணித்துள்ள நிலையிலும், நீதி கிடைக்க வேண்டும் என எஞ்சியிருப்பவர்கள் தொடர்ந்தும் போராடிவருவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆகவே இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க கோரி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

உறவுகளை தேடி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் இறப்புக் காரணமாக அவர்களின் உறவுகள் காணாமலாக்கப்பட்டமைக்கான சாட்சிகள், ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த துன்பியல் நிலை தொடர்ந்தால் இறுதியில் சாட்சிகள் இன்மையால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை முடிவிற்குக் கொண்டுவருவது சிங்கள அரசுக்கு சுலபமாகிவிடும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட மிருசுவில் படுகொலையாளிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை, திருகோணமலையில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் இருந்து கரன்னகொட விடுவிக்கப்பட்டமையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் இரவோடு இரவாக மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்படுவது, பூர்வீக நிலங்களை கையகப்படுத்துதல், போராட்டத்திற்கு முன்னிலை வகிப்பவர்கள் விசாரணைகளுக்கு அளிக்கப்படுவது உள்ளிட்டவற்றையும் அதில சுட்டிக்காட்டியுள்ளனர்.

Print Friendly, PDF & Email