SHARE

பிரித்தானிய நிழல் நிதி அமைச்சர் ஜேம்ஸ் முர்ரே அவர்களுடனான இராஜதந்திர சந்திப்பு

இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, பிரித்தானியாவின் நிதித்துறைக்கான நிழல் அமைச்சரும், முன்னாள் பிரதி மேயரும், ஈலிங் வடக்கு (Ealing North) பாராளுமன்ற உறுப்பினருமான, மதிப்பிற்குரிய ஜேம்ஸ் முர்ரே (James Murray MP) அவர்களுடன் உயர்மட்ட சந்திப்பு ஒன்று இன்று (27/01/2022) மதியம் 02 மணியளவில் மெய்நிகர் வழியாக இடம்பெற்றுள்ளது.

சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் (ICPPG) பணிப்பாளர் அம்பிகை. க. செல்வகுமார், தொழில் கட்சிக்கான தமிழர்கள் (Tamils For Labour) அமைப்பின் தலைவர் திரு சென் கந்தையா மற்றும் சில மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான  இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP மற்றும் ICPPG ஆகிய அமைப்புக்கள் சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு (FCDO) இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள் கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு என்றும், சந்திப்பில் கலந்துகொண்ட சித்திரவதைக்குள்ளானவர்கள் இதற்கு நேரடி சாட்சி என்றும் தெரிவித்தார்.

மேலும் தங்கள் தொகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களிற்கு நீதியினைப் பெற்றுக்கொள்ளவதற்கு ஏதுவாகவும் தொடர்ந்து இலங்கையில் இடம்பெறும் சித்திரவதைகளை நிறுத்துவதற்கு ஏதுவாகவும் தமிழர்களிற்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு (APPGT) மற்றும் மக்நிட்ஸ்கை தடைகளிற்கான அனைத்துக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுக்களில் (APPG for Magnitsky Sanctions) இணைந்து செயற்பட அழைப்பு விடுத்ததுடன் சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரும் சிறிய காணொளியினை சமூக வலைத்தளங்களில் வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார்.

தொடந்து உரையாற்றிய சென் கந்தையா அவர்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்வதற்கு அனுப்பிய கோரிக்கைகளுக்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தை தருவதுடன், அமெரிக்கா தடைசெய்த பின்னும் பிரித்தானியா தயங்குவது குழப்பத்தை தருகின்றது என்றும் குறிப்பிட்டார். மேலும் பிரித்தானியா பொருளாதாரத்தில் தமிழர் பங்களிப்பின் முக்கியத்துவதையும், அவர்கள் கோரிக்கைக்கு செவிமடுக்கப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

திருமதி அம்பிகை க செல்வகுமார் தனது உரையின் போது கடந்த ஒரு சில மாதங்களிற்குமுன்னர் சித்திரவதைக்கு உள்ளாகியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் மற்றும் ஆதாரங்களை ICPPG திரட்டி வைத்திருப்பதாகவும், 12 வயது முதல் 60 வயது வரையானவர்கள் உட்பட வயது வேறுபாடு இன்றி தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதற்கும், யுத்தம் முடிந்து 13 வருடங்கள் ஆகியும் இனப்படுகொலை தொடருவதற்கான ஆதாரங்களையிம் திரட்டி ICPPG ஐநாவுக்கு வழங்க வருவதையும் குறிப்பிட்டார். மேலும் உரியமுறையில் நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் அவற்றை பிரித்தானிய அரசிற்கு வழங்கத் தயார் எனவும் தெரிவித்து, சித்திரவதையில் தப்பி வந்தவர்களை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.

மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களான மகேஸ்வரன் இராசையா, பிரவின்டன் ஜோர்ஜ் கமில்டன் , திருஞானசம்பந்தர் லகஷ்மன், நிலக்சன் சிவலிங்கம், மகாலிங்கம் கபாஸ்கரன் ஆகிய சித்திரவதையில் இருந்து தப்பியவர்கள் உட்பட இன்னும் சிலா் கலந்து  கொண்டு தங்கள் அனுபவல்களை பகிர்ந்து கொண்டனர்.

அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நிழல் அமைச்சர் ஜேம்ஸ் முர்ரே அவர்கள், சவேந்திர சில்வா உட்பட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்யும் கோரிக்கைக்கு தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன், தமிழ் மக்கள் சார்பாக பாராளுமன்ற விவாதங்களின் ஊடாக இவற்றை வெளிக்கொணர்ந்து உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

சவேந்திர சில்வா உட்பட்ட இனப்படுகொலை குற்றவாளிகளான இலங்கை இராணு தளபதிகளை பிரித்தானியா தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரித்தானிய இளையோர் தொடர்ந்து இராஜதந்திர சந்திப்புகளை நடாத்தி ஆதரவு திரட்டிவருவது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email