மனித உரிமை மீறல்களுக்காக மேலும் இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தடைகளை வெளியுறவுத்துறை மேலும் விரிவுபடுத்தியுள்ள நிலையில் திருகோணமலையில் காணாமல் போன 11 பேருடனான சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க என்ற சிப்பாய் ஆகியோருக்கே அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் இருவரினதும் குடும்பத்திற்கும் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்காக அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட இரண்டாவது மற்றும் மூன்றாவது இலங்கைப் படையினர் இவர்கள் ஆவர். முன்னர் 2020 ஆம் ஆண்டில், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது, இலங்கையில் நடந்த இறுதிப்போரில் “அவரது கட்டளைப் பொறுப்பின் கீழ் இ மனித உரிமைகள் நடைபெற்றமை நம்பகரமான தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் (அறிக்கை) எங்கள் வெளியுறவுக் கொள்கையின் மையத்தில் மனித உரிமைகளை பேணிக்காப்பதில் உறுதியாக உள்ளோம். முனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றின் மீது கவனத்தை ஈர்க்கவும் பொறுப்புக்கூறலை மேம்படுத்தவும் பொருத்தமான அதிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் இந்த உறுதிப்பாட்டை நாம் வழங்குவோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.