SHARE

யாழ், புங்குடுதீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் பெண் ஒருவருடையது எனவும் , சடலத்துடன், வாய்க்கரிசி போட்டமைக்கக்கான அடையாளங்கள் மற்றும் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த எலும்புக்கூடு புதையுண்டு இருந்த நிலையை பார்க்கும் போது, உரிய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படுகின்றமையால் இது நல்லடக்கம் செய்யப்பட்ட சடலமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுத் தொகுதி , அவற்றுடன் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்ட நீதவான் அது தொடர்பில் பகுப்பாய்வு பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்துள்ளார். இதனையடுத்து  அகழ்வு பணிகள் நிறைவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு இருப்பினும்  சடலம் மீட்கப்பட்ட பகுதியை அண்மித்த பகுதிகளில் கிடங்குகள் வெட்டி , கட்டட வேலைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் , மீட்கப்பட்ட சடலத்தின் பகுப்பாய்வு அறிக்கைகள் நீதிமன்றுக்கு கிடைத்த பின்னர் , நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதிகளில் வேலைகளை முன்னெடுக்குமாறும் ஏனைய பகுதிகளில் வேலைகளை முன்னெடுக்க தடையேதும் இல்லை என ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.

அதனைத் தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகள் இடை நிறுத்தப்பட்டு இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர். அதன் அடிப்படையில் இன்றைய தினம் வியாழக்கிழமை நீதவான் , சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்டவர்கள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email