SHARE

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வசந்திரன் இராணுவத்தினரால் மிலேச்சத்தனமான தாக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கபட்டமையை கண்டித்து முல்லைத்தீவு நகரில் இன்றையதினம் (28) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர பண்டாரவன்னியன் சிலையடியில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்பாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.

‘கைது செய் கைது செய் தாக்கிய இராணுவத்தினரை கைது செய்’ ‘ஊடக சுதந்திரம் மக்களின் சுதந்திரம்’, ‘இராணுவ அராஜகத்தை நிறுத்து’, ‘ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து’ போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன்சுவாமிகள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஆண்டியையா புவனேஸ்வரன், துரைராசா ரவிகரன்,  கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் விஜிந்தன், சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

போராட்டம் இடம்பெற்ற இடத்தை சூழ ஆயுதம் தங்கிய இராணுவத்தினர் பலர் நிறுத்தப்பட்டிருந்ததோடு புலனாய்வாளர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் கலகம் அடக்கும் பொலிஸாரும் பேரூந்து ஒன்றில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாகனம் ஒன்றில் வந்த இராணுவத்தினர் போராட்டம் மேற்கொண்டவர்களை தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Print Friendly, PDF & Email