சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் உலக மனித உரிமைகள் தினம்-2020 நிகழ்வு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.
நோர்வேயின் முன்னாள் சமாதானத்தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் பிரதம விருந்தினராக கலந்துகொள்ளும் (Zoom தொழில் நுட்பம் ஊடாக) இந்நிகழ்வில் உலகளாவிய மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதேவேளை, இந்நிகழ்வில் நடப்பாண்டுக்கான மனித உரிமைகள் விருது M.C.M இக்பால் அவர்களுக்கும் பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் பிலிப் மில்லர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர் றேச்சல் ஆகியோருக்கு T.I.C யின் முன்னாள் இயக்குனர் மறைந்த வரதகுமார் அவர்களின் நினைவு விருதும் வழங்கப்படவுள்ளது. தவிர செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.
உலகளாவிய மனித உரிமைகள் பிரகடணத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய ஆண்டு நிறைவையிட்டு மனித உரிமைகள் தினத்தை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
இம்முறை கொவிட்-19 இடர்கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு அதன்பால் பிரித்தானியாவில் விதிக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களிற்கு உட்பட்டு மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.