SHARE

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை எடுத்துள்ளதாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நேற்றிரவு எழுத்துமூலமாக மணிவண்ணனிற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், இன்று அவருக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றின் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று (சனிக்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

13ஆம் திகதி இரவு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்தியகுழு கூடி ஒரு சில முடிவுகளை எடுத்ததாகத் தெரிவித்துள்ள அவர், விசேடமாக மணிவண்ணன் தொடர்பாக பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டன என்று குறிப்பிட்டார்.

மேலும், மணிவண்ணன் தமது அறிவிப்பை படித்துவிட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், அடுத்தகட்டம் தொடர்பாக தெரிவிக்கவுள்ளதாக கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மணிவண்ணன் மீதான நடவடிக்கைக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

Print Friendly, PDF & Email