SHARE

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருட்டுத்தனமாக உருவாக்கப்பட்ட கட்சி எனச் சாடியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கூட்டமைப்பு உடனடியாக கலைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (10) நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருட்டுத்தனமான வழியிலேயே உருவாக்கப்பட்டது. அந்தக் கட்சிக்கு தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு கூட இல்லை. தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட வேண்டும்.

ஏனெனில், தந்தைசெல்வா இறந்து பல வருடங்களின் பின்னரே மாவை சேனாதிராஜா அந்தக் கட்சியைப் பொறுப்பேற்றவர். அதற்கு எவரும் அனுமதி கூட வழங்கவில்லை. மாறாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அனுமதி வழங்கியே மாவை கட்சியின் பொறுப்பை ஏற்றுகொண்டார்.

இவ்வாறு அனைத்தும் திருட்டுத்தனமாகவே நடைபெற்றது. அதனால்தான் கூட்டமைப்பை உடனடியாக கலைக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.

மாவை, சம்பந்தன், சுமந்திரன் தவிர்ந்த அனைத்து தரப்புக்களும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைய முன்வரவேண்டும். பலமான ஒரு கூட்டினை உருவாக்க வேண்டும்.

அதற்காகவே வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கட்சியின் பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுத்திருந்தேன். எனினும் அவர் இன்றுவரை முன்வரவில்லை.

மேலும் தற்போது நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் சில மோசடிகள் இடம்பெற்றன என குற்றஞ்சாட்டப்படுகின்றது. அவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலே நானாக இருந்தால் பதவியை பொறுப்பேற்க மாட்டேன்.

சசிகலா ரவிராஜ் குற்றச்சாட்டினை முன்வைத்து வருகின்றார். அப்படியாயின் எதோ காரணம் இருக்கலாம். ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

குறிப்பாக வாக்கு எண்ண ஆரம்பிக்கும்போது உறுப்பினர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை என்று கூறப்படுகின்றது. உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்” என்றார்.

Print Friendly, PDF & Email