தமிழர்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட இன அழிப்புகளில் ஒன்றான கறுப்பு ஜூலையின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று லண்டனில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா தொற்று நோய் குறித்த பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாகவும் பிரித்தானிய பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்பாகவும் புலிக்கொடிகளை ஏந்தியவாறு ஒன்றுதிரண்ட பெருமளவிலான தமிழர்கள் தொடரும் இன அழிப்புக்கு எதிரான கோசங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இரத்தக்கறை மாறாத “கறுப்பு ஜுலை” 1983ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று 37 ஆண்டுகளாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். வகைதொகையின்றி படுகாயமடைந்தார்கள்.
தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டன. தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி தமிழர்கள் மீது தாக்குதல்களை சிங்கள இன வெறியர்கள் திட்டமிட்டு நடத்தினார்கள்.