SHARE

மன்னாரில் முழுமையாக முடக்கப்பட்ட தாராபுரம் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2 குடும்பங்களுக்கு கொரோனா தொற்று குறித்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை அதிகாலை முதல் எதிர்வரும் ஒரு வாரத்திற்கு முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு குடும்பங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொரோனா சமூதாய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் குறித்த கிராமத்தில் உள்ள இரு வீடுகளுக்கும் சென்று அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள 8 உறுப்பினர்களுக்கும் கொரோனா சமூதாய பரிசோதனைகளை மேற்கொண்டார்.

மேலும், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதாரத் துறை பணியாளர்களும் குறித்த வீடுகளுக்கு சென்றதோடு கிருமி நீக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர்.

மேலும் தாராபுரம் கிராமத்தைச் சுற்றி இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளைச் சேர்ந்த 464 குடும்பங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email