SHARE

இலங்கை சோஷலிச குடியரசின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் 8ஆவது தேர்தலுக்கான வாக்களிக்கும் நடவடிக்கைகள் நிறைவுபெற்றுள்ளன.

நாடளாவிய ரீதியில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் வாக்களிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மாலை 5 மணியுடன் வாக்களிப்பதற்கான நேரம் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் 05.15 மணி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் வாக்குப் பெட்டிகள் வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்திற்கு கொண்டுசெல்லும் பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில், வாக்குகள் எண்ணும் பணி விசேட பாதுகாப்பின் கீழ் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியகட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்களிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட 20 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

புதிய ஜனநாயக முன்னணி சார்பாக அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோட்டாபய ராஜபக்ஷவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மேலும் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடியே 59 இலட்சத்து 92,096 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

நாடு முழுவதுமுள்ள 12,845 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

வாக்களிப்புக்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கெண்ணும் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 60,175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.0


Print Friendly, PDF & Email