SHARE

திருகோணமலையில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை சர்வதேச மன்னிப்புச் சபை வரவேற்றுள்ளது.

அத்தோடு அந்த விசாரணைகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் சில சீர்த்திருத்தங்கள் அவசியம் என்றும் அந்த சபை தெரிவித்துள்ளது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 13 பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

எனினும் அவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் இல்லையெனக் கூறி அவர்களை திருகோணமலை மேல் நீதிமன்றம் கடந்த மாதம் 3ஆம் திகதி விடுதலை செய்திருந்தது.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மீள் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே அவரின் தீர்மானம் வரவேற்கத்தக்கதென சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் இந்த கொலைகள் தொடர்பான நீதி கிடைக்கப்பெறுவதற்கும் முழுமையானதும், கண்டிப்பானதும், பயனுறுதி உடையதுமான பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம் என்பதை சர்வதேச மன்னிப்புச்சபை அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை உள்நாட்டு நீதிமன்ற முறைமை ஒன்றினூடாக அல்லது விசேட சட்டவாதி ஒருவரை உள்ளடக்கிய நீதிமன்றப் பொறிமுறை ஊடாக விசாரணை செய்து, கொலைகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வதற்கு சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் கடப்பாடு உடையதாக இருக்கின்றது என்றும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும் தற்போது வசிக்கின்ற நாடுகளிலிருந்து பரஸ்பர சட்ட உதவிகளைப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

கொலையுண்ட மாணவர்களின் குடும்பத்தவர்களும் சம்பவத்தில் உயிர் தப்பிய இளைஞர்களும்கூட இலங்கையைவிட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களாலும், சாட்சிகளாலும் வெளிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அச்சங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், இலங்கைக்கு வெளியே இருக்கும் சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் விசாரணைகளில் பங்கேற்பதற்கு வசதி செய்வதற்காக 2015ஆம் ஆண்டின் குற்றச்செயல் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் பாதுகாப்பிற்கான சட்டத்தில் இலங்கை அரசாங்கம் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை கேட்டுக்கொண்டுள்ளது.

சாட்சிகளும் பாதிக்கப்பட்டவர்களும் தற்போது வசிக்கின்ற வெளிநாடுகளிலுள்ள இலங்கையின் தூதரகங்களிலிருந்து சாட்சியளிப்பதற்கு வசதி செய்வதற்கும் அப்பால் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யக்கூடியதாக அந்தச் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்றும் மன்னிப்புச்சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email