மன்னார், தலைமன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் பண்ணை வளாகத்தில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் கிளைமோர் குண்டு ஒன்றை மன்னார் பொலிஸார் இன்று (22.04.2019) திங்கட்கிழமை காலை மீட்டுள்ளனர்.
குறித்த பண்ணையின் உரிமையாளர் குறித்த துப்பரவு செய்து கொண்டிருந்த போது முருங்கை மரத்தின் கீழ் வெடி பொருள் புதைத்துள்ளமையை அவதானித்த நிலையில், உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மன்னார் பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதோடு குறித்த வெடிபொருளையும் பார்வையிட்டுள்ளனர்.
குறித்த கிளைமோர் குண்டு ஒன்று பொதி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக, மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதோடு,கண்டு பிடிக்கப்பட்ட கிளைமோர் குண்டை மீட்டு, செயழிலக்கச் செய்யும் நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவமானது, ஓலைத்தொடுவாய் வளன் நகர் பகுதியில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.