SHARE

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்து தொடர்பில் மற்றுமொரு சோகச் செய்தி வெளியாகியுள்ளது.

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில்  மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று அதிகாலை  இடம்பெற்ற  வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட  10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த இவர்களில் வெளிநாட்டில் 20 வருடங்களாக பணியாற்றிவிட்டு நாடு திரும்பியிருந்த நபர் ஒருவரும் நேற்றைய விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ஜோஷப் ரெலின்டன் ஓமானில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

நீண்ட வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய தனது குடும்ப உறுப்பினரை அழைத்துச் செல்வதற்காக குடும்பத்தார் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கடந்த 13 ஆம் திகதி வந்துள்ளனர்.

பின்னர் ஜோஷப் ரெலின்டனை அழைத்துக்கொண்டு தெஹிவளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளனர்.

இதனையடுத்து  கடந்த திங்களன்று  இரவு ஜா-எல பகுதிக்கு   தமது உறவினர் வீடொன்றுக்கு வந்துள்ளனர்.  அதன் பின்னர் அங்கு இருந்து உறவுக்கார சிறுமி ஒருவரையும் அழைத்துக்கொண்டு கண்டி, நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா  சென்றுள்ளனர்.

சுற்றுலா சென்று  மட்டக்களப்பில் உள்ள தமது வீடு நோக்கி செல்லும் போதே விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். 

Print Friendly, PDF & Email