SHARE

சாவகச்சேரியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளையிட்டமை தொடர்பில் கைத் செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் எத்ரிவரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த தனியார் நிறுவனத்தில் கொள்ளையில் ஈடுபட்டார்கள் எனும் சந்தேகத்தில் சாவகச்சேரி பொலிஸார் மற்றும் மாவட்ட புலனாய்வுப் பொலிஸாரால் வங்கி ஊழியரான பெண் அவரது காதலன் மற்றும் நண்பர் என மூவரை கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

கொள்ளை சம்பவம் 

கடந்த 19 ஆம் திகதி புதன்கிழமை காலை சாவகச்சேரியில் உள்ள  தனியார் நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது 18 இலட்சத்து 91 ஆயிரத்து நூற்றுப்பத்து ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தெரியவருவதாவது,

50 ஆயிரமே கொள்ளை 

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளில் குறித்த தினத்தில் காலை 50 ஆயிரம் ரூபாய் மாத்திரமே கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிதி நிறுவனத்தில் ஏற்கனவே இல்லாமல் போன 18 இலட்சத்து 91 ஆயிரத்து நூற்றுப்பத்து ரூபாவையும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முழுத்தொகை பணமும் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறி இழப்பீட்டு காப்புறுதி பெற்றுக் கொள்ளவே தனது ஆண் நண்பர் ஊடாக இந்த கொள்ளை நாடகத்தை பெண் வங்கி ஊழியர் அரங்கேற்றியுள்ளமை கண்டறிந்துள்ளனர்.

கொள்ளையர்கள் இனம் காணப்பட்டனர் 

குறித்த சம்பவத்தை தொடர்ந்து சாவகச்சேரி பொலிஸார் குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பு கமராவில் கொள்ளையர்களை முன்னதாக இனங்கண்டுள்ளனர். இருப்பினும் மோட்டார் சைக்கிள் இலக்கம் மூடி மறைக்கப்பட்டு இருந்துள்ளது.

பின்னர் கொள்ளையர்கள் சென்ற வழியில் உள்ள சகல பாதுகாப்பு கமராக்களையும் பொலிஸார் கண்காணித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஏ-9 வீதியில் ஏறும் போதே மோட்டார் சைக்கிள் இலக்கத்தை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

கொள்ளையர்கள் கைது 

அதனையடுத்து விசாரணைகளை முடுக்கிவிட்ட பொலிஸார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பெண், அவருடைய ஆண் நண்பர், அவருடைய நண்பர் என மூவரையும் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். கொள்ளைக்கு பயன்படுத்திய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட போது ,

குறித்த நிதிநிறுவன ஊழியரான பெண் கடந்த 18 ஆம் திகதியே கொள்ளை நாடகத்தை அரங்கேற்ற இருந்ததாகவும் அந்த சமயம் நிதி நிறுவனத்தில் ஏனைய உத்தியோகத்தர்கள் காணப்பட்டதால் கொள்ளை நாடகம் 19 ஆம் திகதி காலை ஏனைய ஊழியர்கள் வருவதற்கு முன்பாக அரங்கேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் 18 ஆம் திகதி இரவு கொள்ளையடிக்க வந்த ஆண் நண்பருடன் சாவகச்சேரி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் சென்றதையும் விசாரணைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை சாவகச்சேரி நீதிமன்றில் கைது செய்யப்பட்ட மூவரையும் முன்னிலைப்படுத்தினர்.
விசாரணைகளை மேற்கொண்ட நீதிவான் மூவரையும் அடுத்த மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email