SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களுக்கு எதிரான 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து “மகாவலிக்கு எதிரான தமிழர் மரபுரிமை பேரவை” எதிர்வரும் 28ம் திகதி தொடக்கம் முல்லைத்தீவில் பாரியளவிலான தொடர் மக்கள் போராட்டம் ஒன்றுக்கான பகிரங்க அழைப்பினை விடுத்துள்ளது.

மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு காணி உத்தரவு பத்திரங்களை மகாவலி அதிகார சபை வழங்கியுள்ளது.

இதேபோல் மகாவலி அதிகாரசபை தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துவரும் நிலையில் மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இணைந்து மகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமை பேரவை எ ன்ற அமைப்பு ஒன்றை ஸ்தாபித்துள்ளனர்.

இந்த அமைப்பினாலேயே போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மகாவலி நீர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தேவையில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் தொல்லியல் அடையாள சிதைப்பு, கலை, கலாச்சார, பண்பாட்டு சிதைப்பு ஆகியவற்றை உடன் நிறுத்தவேண்டும். தமிழர் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள தென்னிலங்கைச் சிங்கள மீனவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காணி உத்தரவு பத்திரங்களை உடன் இரத்துச் செய்யவேண்டும். என்ற 3 அம்ச கோரிக்கையை முன்வைத்து எதிர்வரும் 28ம் திகதி காலை 11மணி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய தொடர் மக்கள் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பை விடுத்துள்ளது.

இந்த போராட்டத்தில் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள், நடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், நகரசபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சி சார்ந்தவர்கள், இளைஞர், யுவதிகளை கலந்து கொள்ளுமாறு அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Print Friendly, PDF & Email