ஈழதேசத்தில் நடைபெற்ற மாபெரும் இனப்படுகொலையின் 9 ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுதினம் தமிழர்களால் இன்று முள்ளிவாய்க்கால் மண் உட்பட உலகெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைத்தும் கண்முன்னே சிங்கள இராணுவத்திடம் பறிகொடுத்த தமது சொந்தங்களை நினைத்தும் கனத்த இதயங்களுடன் உறவுகள் அஞ்சலிகள் செய்தனர்.
இந்நிலையில் பிரித்தானியாவில் பிரதமர் வாசல்ஸ்தலத்திற்கு முன்னாள் இன்று மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான நினைவெழுச்சி நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் ஒன்று கூடினர்.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கான ஈகைச்சுடரினை திருமதி சிவகுமார் அனுஷா ஏற்றிவைத்தார். தொடர்ந்து பிரித்தானிய தேசியகொடி ஏற்றப்பட்டதுடன் தமிழீழ தேசியகொடி தேசிய கீதம் இசையுடன் ஏற்றப்பட்டது.
இதனையடுத்து பிரத்தியோக கல்லறைக்கான மலர் மாலை சூட்டப்பட்டதுடன் பொதுமக்களின் மலர் அஞ்சலி இடம்பெற்றது.
இதேவேளை நினைவெளிச்சி உரையினை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் வெள்ளைப்புலி என வர்ணிக்கப்படும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் சேர் எட் டேவி மற்றும் பேராசிரியர் ஆண்டி ஹிக்னின்போட்டோன் ஆகியோர் வழங்கினர்.
கடந்த இரு ஆண்டுகளை விட இம்முறை அதிகளவிலான மக்கள் நினைவெழுச்சியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. சிறுவர் முதல் வயது முதிர்தவர்கள் என பலர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.