– தமிழீழ மருத்துவர் வாமன் எச்சரிக்கை! –
பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வுகளில், பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) தமிழீழ தேசியக்கொடியை ஏற்ற மறுத்து வருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வேதனையை தோற்றுவித்து வருகின்றது. மக்களின் அபிலாசைகளுக்கு விரோதமான போக்கை கைவிடும்படி, பிரித்தானிய தமிழர் பேரவையின் (BTF) தலைமையிடம் பல தரப்பட்டவர்களும் கோரிக்கைகளை முன்வைத்து வரும் இவ்வேளை, துறைசார் நிபுணர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள் என பலரும் தமது கருத்துக்களை ஊடக மூலம் வெளியிட்டு மக்களை தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வகையில், தனது கருத்தை வழங்கிய தமிழீழ மருத்துவர் வாமன் அவர்கள், ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று ஏற்றுக் கொள்வதே தேசியக் கொடியைக் கைவிடுவதன் விளைவாகும்! ஆவர் வழங்கிய கருத்தின் முழு வடிவத்தை கீழே காணலாம்;
தமிழீழத் தேசிய எழுச்சி
இலங்கையை காப்பாற்றிவரும் பல சக்திவாய்ந்த நாடுகளின் நிலைப்பாடு நீண்ட எம் விடுதலைப்போரினால் கட்டியெழுப்பப்பட்ட ஒருமித்த தமிழர் தேசியத்தை ஏற்காத நிலைப்பாடாகும்!
அதனால் எமது தேசியப் போராட்டத்தைப் பயங்கரவாதமாக்கி, அதனால் உருவாகிய தேசிய அடையாளங்களைச் சிதைக்கும் இலங்கையின் எண்ணத்துடன் இந்த நாடுகள் மறைமுகமாக ஒத்துழைக்கின்றன.
இலங்கையைத் தமது பிராந்திய நலனுக்குப் பணியவைக்கும் வல்லரசு நாடுகளின் ஆதாயமே யுத்தக்குற்றம் சார்ந்த ஐ.நா மன்றப் பிரேரணைகள்.
ஈழத்தமிழர்கள் ஒரு தேசிய இனமல்ல என்று ஏற்றுக் கொள்வதே தேசியக் கொடியைக் கைவிடுவதன் விளைவாகும்.
எமது தேசம் எமது கொடியின் கீழ் ஒன்றாக வேண்டும்.
எம்மிடமிருந்து எமது தேசத்தின் கொடியைப் பிடுங்குவது தமிழீழ தாயகக் கோட்பாட்டை ஒழிப்பதேயாகும்!
சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் எண்ணத்துக்காக நாம் எமது தேசிய எழுச்சியைக் கைவிட முடியாது. சர்வதேசத்தின் விருப்பின் அடிப்படையில் உருவாகியதல்ல தமிழரின் தேசியப் போராட்டம்.
தமிழ் மக்களின் விருப்பத்தை முன்நகர்த்தி, சம தரப்பாக உலக நாடுகளின் மத்தியஸ்தத்தோடு பேசிய எமது விடுதலை வரலாற்றில் நிலைபெற்ற தேசியச் சின்னமே எங்கள் தேசியக் கொடி.
இனி நமது நிகழ்வெல்லாம் எமது தேசத்தின் நிழலில் நடக்கட்டும்!
உலகம் ஒத்துவராவிட்டால் அடுத்த தலைமுறைகளிடம் எமது தேசிய விடுதலை எழுச்சி கைமாற்றப்படட்டும்!
எமது தேசியத்தை அங்கீகரிக்காத தமிழர் பிரத்நிதித்துவம் ஒருபோதும் தமிழின எழுச்சியை உருவாக்கப்போவதில்லை!
தாயகத்தின் அடக்குமுறைகளுக்கு நடுவே சிவப்பு மஞ்சள் கொடிகளோடேயே எழுகதமிழ் எழுச்சி ஆதரவு பெற்று வருகின்றது.
தமிழீழ தேசத்தின் எழுச்சியின் சின்னமாக அமைந்த தமிழீழத் தேசியக்கொடியினை நாமே புறம்தள்ளிவைப்பது பாரிய தவறே!
கடந்த பல வருடங்களாக அவதானித்துவந்ததன் வகையில் நாம் எமது அடையாளங்களைத் உயரத்திப்பிடிக்காமல் கைவிடுவது இலங்கை அரசின் தரப்பாக மாறுவதாகவே வரலாற்றில் புரிந்துகொள்ளப்படும்.
பல்லக்கில் சுமந்ததற்காக உரிமையைத் தாரைவார்த்த தலைவர்கள் வரலாற்றுக் குற்றவாளிகளாகவே புரிந்துகொள்ளப்பட்டார்கள்.
பல்லாயிரம் உயிக்கொடை செய்த தமிழரின் வரலாற்றுப் பெறுமானமே தமிழீழத்தேசிய அசைவியக்கம்!
எங்கள் அடையாளத்தை உயர்திக் கொள்ளவேண்டிய, பேரெழுச்சியை உருவாக்கவேண்டிய வேளை இது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
மருத்துவர் வாமன் என்று அழைக்கப்படும் Dr. V. தர்மரட்ணம் அவர்கள் விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். யாழ் பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியை ஆரம்பித்து, பின்னர் தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவ கல்வியை நிறைவுசெய்து தமிழீழ மருத்துவ துறையில் பெரும்பங்கு வகித்தவர். தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, தனது காலை இழந்தவர். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான இவர், தனது மருத்துவ சேவை மூலம் பல்லாயிரக்கணக்கான போராளிகள் மற்றும் மக்களின் உயிர்களையும் காத்தவர். தேசியப்பற்றுடன் இறுதிவரை களத்தில் நின்று, தனது உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவையாற்றியவர். இறுதி யுத்தத்தின் முக்கிய சாட்சியங்களுள் ஒருவரான இவர் புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்துவைக்கப்பட்டு பல சித்திரவதைகளையும் அனுபவித்து மீண்டவர். புலம்பெயர் தேசத்தில் அடைக்கலம் புகுந்த நிலையிலும் அவர் தேசிய பற்றையும் மனிதநேயப் பணிகளையும் கைவிடவில்லை. ‘ஊதா’ என்ற தொண்டு நிறுவனத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்தது மட்முமன்றி, புலத்தில்; தவிக்கும் எமது உறவுகளை வாழவைக்கும் பெரும் பணியில் தன்னை அர்பணித்து செயற்பட்டு வருகிறார்.