SHARE

”தமது கட்சிக்கு எதிராக எந்த சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம்” என தமிழரசு கட்சியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான  சி .சிறிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் மாநாட்டுக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகளை அடுத்து , இரு மாவட்ட நீதிமன்றங்களினாலும், மாநாட்டிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தடை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சிறிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” எந்த வழக்கையும் எதிர்கொள்ள நாம்  தயார். எமக்கெதிரான சூழ்ச்சிகள் , தடைகளை நாம் மக்களின் ஆத்ம பலத்துடன் முறியடிப்போம். என்னையும் எனது கட்சியையும் குழப்பும், அச்சுறுத்தும் வகையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இவற்றை கண்டு நாம் அஞ்ச போவதில்லை. என்னை தமது தலைவராக ஏற்றுக்கொண்ட கட்சியையும் எமது மக்களையும் இப்படியான சூழ்ச்சிகளால் முடக்க முடியாது. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம். நீதி நிச்சயம் வெல்லும் ” இவ்வாறு  சிறிதரன் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email