SHARE

தமிழர்களின் தைத்திருநாளாகிய பொங்கல் விழா பிரித்தானிய பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான இலக்கம் 10 டவுனிங் வீதியில் நேற்று (18) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதிகாரபூர்வ நுழைவாயிலில் கண்கவர் கோலமிட்டு தமிழீழத்தின் தேசிய மலரான கார்த்திகை பூ அலங்கரிக்கப்பட்ட பொங்கல் பானை மற்றும் கரும்பு என்பவற்றுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுகாதாரம் மற்றும் சமூக பராமரிப்புக்கான அமைச்சர் விக்டோரியா அட்கின்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வியாளர்கள், சட்டவாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உட்பட பிரித்தானிய தமிழ் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள், குறிப்பாக இங்கிலாந்துக்கான இந்திய உயர் ஸ்தானிகர் விக்ரம் துரைசுவாமி என பலர் கலந்து கொண்டனர்.

இதில் தமிழ் சமூகத்தை வரவேற்று உரையாற்றிய அமைச்சர் அட்கின்ஸ்,

உலகப் போரின் முன்னோடி விமானிகள் முதல் கோவிட் தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் வரை ஐக்கிய இராச்சியத்திற்கு தமிழர்களின் நீண்டகால பங்களிப்புகளை பாராட்டினார். மேலும் தேசிய சுகாதார சேவையில் பணியாற்றும் தமிழர்களுக்கும், ஆசிரியர்கள் உட்பட தமிழ் கல்வியாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான இங்கிலாந்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவை வலியுறுத்துவதாகவும் இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிக்கும் ஒரு திட்டத்திற்காக 11 மில்லியன் பவுண்டுகள் ஒதுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இது நீதிக்கான ஐக்கிய இராச்சியத்தின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரது உரையை தொடர்ந்து திருமதி உஷா ராகவனின் மாணவிகளின் பாரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றதுடன் பொங்கல், தோசை, இட்லி, வடை உள்ளிட்ட பாரம்பரிய தமிழ் உணவுப் பண்டங்களும் பரிமாறப்பட்டன.

Print Friendly, PDF & Email