SHARE

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2023 நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டன் பார்நெட் (Barnet) இல் நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடணப்படுத்தப்பட்ட உலகளாவிய மனித உரிமைகள் தினத்தை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் அவற்றினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி TIC யின் இவ்வாண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (10) இலண்டன் பார்நெட் (Barnet) நகரில் அமைந்துள்ள Multi Cultural Community Centre இல் பிற்பகல் 2.00 மணிமுதல்; 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

அனைவருக்குமான கண்ணியம் சுதந்திரம் மற்றும் நீதி (Dignity freedom and Justice for All) என்ற கருப்பொருளை மையமாக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த மனித உரிமைகள் தின நிகழ்வில், பிரதம விருந்தினராக பார்னட் நகர மேயர் Cllr.Nagus Narenthira அவர்களும் சிறப்பு விருந்தினராக பிரித்தானியாவின் பார்னட் தொகுதிக்கான பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களுக்கான பிரித்தானிய அனைத்து கட்சி பாராளுமன்ற குழுவின் துணைத்தலைவருமான Rt.Hon.Theresa Villiers உம் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

அதேவேளை, இந் நிகழ்வின் சிறப்பு பேச்சாளர்களாக கிங்ஸரன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் பேராசிரியரும் மனித உரிமை மற்றும் சமூக நீதியாளருமான DR Andy Higginbottom  அவர்களும் இனப்படுகொலைகளை தடுப்பதற்கான APPG யின் இயக்குனர் Andy Bailey அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.

இதனிடையே இந்நிகழ்வின் பிரதான சிறப்பம்சமாக TIC யினால் வழங்கப்படும் 2023 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் விருதுகள் இம்முறை இருவருக்கு வழுங்கப்படவுள்ளது. உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச செயற்திட்டத்தின் (ITJP) இயக்குனரும் முன்னாள் ஊடகவியலாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் ஐ.நா.வின் ஆலோசகருமான Frances Harrison அவர்களும், ஊடகவியலாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான Bashana Abeywardane அவர்களும் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

TIC யின் முன்னாள் இயங்குனர் மறைந்த வரதகுமார் ஞாபகார்த்த விருது எழுத்தாளரும் மனித மரபியல் கல்வி ஆய்வாளருமான Dr. Siva Thiagarajah அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

இதே வேளை மனித உரிமைகள் சார்ந்த கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உலகளாவிய ரீதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email