SHARE

தீர்க்கதரிசன கருத்தோவியர் என்று அழைக்கப்படுபவரும் வடமாகாண ஊடகவியலாளர்களது கூட்டிணைந்த கட்டமைப்பான யாழ். ஊடக அமையத்தின் அங்கத்தவருமான மறைந்த ஊடகவியலாளர் அமரர் அஸ்வின் சுதர்சன் ஞாபகார்த்த புலமைப்பரிசில் வழங்கல் நிகழ்வு நாளை சனிக்கிழமை யாழ் ஊடக மையத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் ஊடகமையத்தில் பி.ப. 3.30 மணிக்கு ஆரம்பமாகும் மேற்படி நிகழ்வில் அஸ்வினின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி மற்றும் நினைவுரைகள் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து அஸ்வின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் யாழ். பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கையை தொடரும் மாணவருக்கு வருடாந்தம் வழங்கப்படும் அஸ்வின் ஞாபகார்த்த புலமைப்பரிசிலும் வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஊடகக் கற்கைநெறியைத் தொடரும் மாணவர்களில் கற்றல் செயற்பாட்டிற்கான உதவிக்கரம் தேவைப்படுபவருக்கே மேற்படி புலமைப்பரிசில் திட்டம் வருடாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.

பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் துறைத்தலைவர் பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் , ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தன் ஆகியோரின் தெரிவுடனும் யாழ். புல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜாவின் இறுதி அனுமதியுடனுமே குறித்த புலமைப்பரிசிலுக்கான மாணவர் தெரிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email