SHARE

தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை நாட்டின் நீதித்துறை கேள்விக்குறியே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் குருந்தூர்மலை உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் நேற்று இடம் பெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கொக்குத்தாெடுவாய் மனித புதைகுழி இன்னும் பல இடங்களிலே இராணுவ முகாம்களிலே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் மனித புதைகுழிகள் என்பது இராணுவம் மற்றும் அரச படைகளால் மிகவும் வன்மமான முறையிலே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தமிழர்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த மண்ணிலே நீதியற்ற மனிதர்களாக தொடர்ந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு தீர்வாக இவ்வாறான விடயங்களுக்கு ஒரு நீதி விசாரணை வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

செம்மணி மனித புதைகுழியிலிருந்து மண்டைதீவு மற்றும் கொக்குதொடுவாயில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி, மன்னாரில் இருக்கும் மனித புதைகுழி என இவ்வாறு பல இடங்களிலும் மனித புதைகுழிகள் தோண்ட தோண்ட தமிழர்களாக வந்து கொண்டிருப்பதுதான் மிகப்பெரிய அநியாயம் என்றும் கூறியுள்ளார்.

இந்த அநியாயத்தினுடைய நீதி என்பது இலங்கையிலே கிடைக்காது என்பதனால் தான் சர்வதேச விசாரணையை கோரி போராட்டம் இடம்பெறுகின்றது என்றும் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email