SHARE

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும், தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் சில கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் நாளைய தினம் குறித்த கடிதமானது இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த கடிதம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இல்லத்தில் கூடி நான்கு கட்சிகளின் தலைவர்கள் குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனும் , புளொட் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும், ஐனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் கையொப்பமிட்டனர்.

ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடமும், தமிழ் தேசிய கட்சி சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தாவும் கையொப்பமிட்ட பின்னர் குறித்த கடிதம் நாளைய தினம் இலங்கைக்கான இந்திய தூதரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்தக் கடிதத்தில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு – கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்றும் பிரதானமாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதம் ஒன்றை அனுப்பவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே கடிதத்தை இந்திய துணைத்தூதர் ஊடாக இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email