SHARE

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நிறைவேற்றாமல் இருக்க அனைவரும் ஒன்றுகூட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க செயலாளர் சிரேஸ்ட. ஜெனிட்டா இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதானது தமிழ் மக்களுக்கு ஜனநாயக போராட்டத்தை பாதுகமாக்கும் என்பதற்காகவும் எமது உரிமைகளை கேட்க முடியாத நிலை ஏற்படும் என்பதற்காகவும், இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை இந்த நாடாளுமன்றத்திலே நிறைவேற்ற கூடாது என்பதை கேட்டுக்கொள்கின்றோம்.

நாம் இன்று ஜனநாயக முறையிலும் அகிம்சை வழியிலும் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். இந்நிலையில் இந்த அரசாங்கமானது பயங்கரவாத தடைச்சட்டத்தினை எடுப்பதாக கூறி புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டுவர இருக்கிறது.

இதனால் எமது ஜனநாயக போராட்டத்தில் கருத்து சுதந்திரம், போராடும் சுதந்திரம் எமக்கு கிடைக்காது என்பதனால் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட அனைவரிடம் கேட்கிறோம் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நிறைவேற்றாமல் இருக்க அடிகோல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email