பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாடு நேற்றைய தினம் (2) ஆரம்பமாகி எதிர்வரும் 5ம் திகதி வரை பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்றுவருகின்றது.
இதில் இலங்கையில் இருந்து ரெலோவின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் கலந்து கொண்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் மக்கள் பிரதிநிதியாக அழைக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பினர் இந்த ஏற்பாட்டை முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களுக்கும் பிரித்தானிய ஆளும் தரப்பிற்குமான உறவுகளைப் பலப் படுத்துவதாக இப்பயணம் அமையும்.
மேலும் ஆளும் தரப்பினரின் பிரதானிகளோடும் முக்கிய சந்திப்புகள் இடம்பெற உள்ளன. தமிழ் மக்களின் அரசியல், சர்வதேச நீதிப் பொறிமுறை மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய விடயங்கள் இச்சந்திப்பில் பிரதான பங்கு வகிக்கும்.
பிரித்தானிய தற்போதைய பிரதமர் லிஸ்ட் ட்ரஸ் அம்மையாருடன் பிரதமர் தெரிவிற்கு சில நாட்களுக்கு முன்னதாக நடந்த இணைய வழிச் சந்திப்பில் சுரேந்திரன் கலந்து கொண்டமையும் அதில் ட்ரஸ் அம்மையார் இலங்கையில் பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை விடயங்களை வலியுறுத்த உறுதியளித்தமையும் அதன் பின் ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கு பற்றிய பின்னர் இந்த மாநாட்டிற்கு சுரேந்திரன் பயணமாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.