SHARE

பொத்துவில் – பொலிகண்டி பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள மனோ, ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டு சட்டத்தை மீறினேன் என்ற குற்றச்சாட்டின் பேரில் எனது வாக்குமூலத்தை பெறவேண்டும் என ஸ்ரீலங்கா பொலிஸ், எனது காவலர் மூலமாக எனக்கு அறிவித்துள்ளது.

வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறுங்கள். நேரம் தருகிறேன் என்று கூறியுள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துக்கு அழுத்தம் கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரெழுச்சிப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இருந்தபோதிலும் கடந்த 3ஆம் திகதி பொத்துவிலில் ஆரம்பமாகிய போராட்டம் பல்வேறு தடைகளின் பின்னர், கடந்த 7ஆம் திகதி பொலிகண்டியைச் சென்றடைந்தது.

இதனையடுத்து, சட்டத்தை மீறி பேரணியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், சட்டத்தரணி கே.சுகாஷ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு எதிராக பி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை என்னும் எழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட தமிழ் பிரதிநிதிகளுக்கு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email