SHARE

– 500 க்கு மேற்பட்ட பிரித்தானிய அமைப்புக்கள் இணைந்து இரண்டாவது கோரிக்கை

எதிர்வரும் மார்ச் இல் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவ மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பிலான பிரேரணையை கொண்டுவர பிரித்தானியா முன்னின்று செயற்படுமாறு இங்கிலாந்திலுள்ள புலம்பெயர்தமிழ் அமைப்புக்கள் ஒருங்கிணைந்து தமது இரண்டாவது கோரிக்கையை விடுத்துள்ளன.

பல்வேறு வகைப்பட்ட 514 புலம்பெயர் அமைப்புக்களின் ஒன்றிணைந்தே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.    ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் (05.01.2021) 250 பிரித்தானிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒரு கோரிக்கையை விட்டிருந்த போதிலும், கடந்த 15 ஜனவரி அன்று தாயகத்தில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஒருமித்த கோரிக்கையை வெளியிட்டதனையடுத்து அதனை முழுமையாக உள்ளடக்கி, அதற்கு முழு ஆதரவு வழங்கும் விதமாக இந்த இரண்டாவது கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.  

ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கையில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தவதற்கான முதற்படியாக, மியான்மர் நாட்டில் ஏற்படுத்தப்பட்டதைப் போன்ற சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையை (IIIM) ஏற்படுத்தும் பிரேரணையை பிரித்தானியா முன்வைக்கும்படி கோரியிருந்தனர். சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு போவதற்கு முன்னர், முதல்படியாக, IIIM போன்ற சுயாதீன பொறிமுறை ஒன்றின் மூலம் ஆதாரங்களை திரட்டி, குற்றவியல் தரத்திலான வழக்கு கோப்புக்களை உருவாக்குவது மிகவும் புத்திசாலித்தனமானது என்ற துறைசார் சட்ட நிபுணர்களின் ஆலோசனை அடிப்படையிலேயே முந்தைய கோரிக்கை வரையப்பட்டிருந்தது.

அத்துடன் ஜெனீவா மனித உரிமைச்சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு நேரடியாக அனுப்பும் அதிகாரம் இல்லாத காரணத்தால் எதிர்வரும் மார்ச் ஐ.நா. அமர்வுகளில் இதனை கேட்பது பொருத்தம் அற்றது என்றும் கருதப்பட்டது.

எனினும் எந்த வகையிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றை நிராகரித்து இருக்கவில்லை. இந்த சுயாதீன பொறிமுறையின் அடுத்த கட்டமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்வதே உள்ளார்ந்த குறிக்கோளாக இருந்த போதிலும், சில அமைப்புக்களும் அரசியல்வாதிகளும் இதனை தவறாக திரிபுபடுத்தி மக்கள் மத்தியிலும் அமைப்புக்கள் மத்தியிலும் குழப்பங்களை உருவாக்க முற்பட்டனர்.

இதனால் இதனை தெளிவுபடுத்தும் வகையிலும், தமிழர் தாயகத்தில் உள்ள எமது மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைக்கு முழுமையான ஆதரவை வழங்கும் விதமாகவும் இந்த இரண்டாவது கோரிக்கை வரையப்பட்டுள்ளது.  இந்த கோரிக்கையில் குறிப்பாக, இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு அனுப்புவதை பரிசீலனை செய்வதையும் பொறுப்பகூறல் விடயத்தை விசாரிப்பதையும் ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக்கும் மற்றும் பொதுச்சபைக்கும் பரிந்துரைக்கவும், ஏற்கனவே கேட்டது போல இனப்படுகொலை மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒரு சர்வதேச சயாதீன புலனாய்வு புலனாய்வுபொறிமுறையை உருவாக்கவும் (மியன்மார் அல்லது சிரியா), தொடரும் இனவழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்க ஐ.நா. விசேட தூதரை நியமிக்கவும் கோரும் பிரேரணையையே பிரித்தானிய அரசு முன்வைக்க வேண்டும் என்று தெளிவாக கேட்கப்பட்டுள்ளது.

அத்துடன் தாயகத்தில் இருந்து வெளியிடப்பட்ட கோரிக்கையின் பிரதியும் இணைத்து அனுப்பட்பட்டுள்ளது.    அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் டொமின் ரப் எம்.பி, தென்னாசியா மற்றும் பொதுநலவாய நாடுகளிற்கான அமைச்சர் அஹமட் ஆகியோருக்கு எழுதப்பட்ட கடித பிரதிகள் பிரித்தானிய பிரதமர் உள்ளிட்டவர்களிற்கு பிரதியிடப்பட்டுள்ளது. 

வரலாற்றில் முதல்தடவையாக 500 க்கு மேற்பட்ட தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அத்துடன், உலக மனித உரிமை கண்காணிப்பகம் (World Human Rights Watch), ரொகின்யா விடுதலை கூட்டமைப்பு (Free Rohingya Coalition), ஜனநாயகம் ஊடாக அமைதிக்கான விதவைகள் அமைப்பு (Widows for Peace through Democracy), சமூகங்களை குற்றவாளிகளாக்குவதற்கு எதிரான அமைப்பை (CAMPACC), குர்திஸ்தான் அமைதிக்கான அமைப்பு (Peace in Kurdistan) மற்றும் ஆபிரிக்க அமைப்புக்கள் உட்பட கிட்டத்தட்ட 20 தமிழர் அல்லாத சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும் இதற்கு ஆதரவு வழங்கியிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

Second-Joint-Letter-to-FCO-with-Encl-Final-04.02.2021

Print Friendly, PDF & Email