“எனது கணவரின் ஓட்டோவில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தாம் பயணம் செய்தமைக்கான பணத்தைக் கொடுக்காமல் அவருடன் முரண்பட்டுக்கொண்டு தாக்குதல் நடத்திவிட்டுக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர்” என பாதிக்கப்பட்டவரின் மனைவி மனித உரிமைகள் ஆனைக்குமுவில் நேற்று (21) முறையிட்டுள்ளார்.
யாழ். நகரப் பகுதியில் நேற்றுக் காலை ஓட்டோ ஒன்றில் சிவில் உடையில் பயணித்த பொலிஸ உத்தியோகத்தர் ஒருவர், குறித்த ஓட்டோவின் சாரதி தன்னைத் தாக்கினார் எனத் தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
இதனையடுத்து சிவில் உடையில் நின்ற பொலிஸாரைத் தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் ஓட்டோச் சாரதி யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஓட்டோச் சாரதியின் மனைவி, யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது கணவர் பொலிஸாரால் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டுள்ளார் என முறையிட்டுள்ளார்.
ஓட்டோவில் பயணித்தமைக்கான பணத்தைக் கேட்டபோது முரண்பட்டு விட்டு, அவர் தன்னைத் தாக்கினார் எனப் பொலிஸார் பொய்யான முறைப்பாட்டைப் பதிவு செய்து தனது கணவரைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று முறையிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.