SHARE
image_pdfPRINT

யாழ்ப்பாணம் மாநகர எல்லையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்தப் பணி மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னேடுக்கப்படுகிறது.

சிறப்பு அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநாகர ஆணையாளர் த.ஜெயசீலன், பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரும் இந்தப் பணியின் ஆரம்பத்தில் பங்கேற்றிருந்தனர்.

கோரோனா வைரஸ் தொற்றுப் பரம்பலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கிருமித் தொற்று நீக்கி விசிறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.