SHARE

முன்னாள் வடமாகாண முதலமைச்சர்
விக்கினேஸ்வரன்

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட பயணத் தடையை இலங்கைத் தமிழ் மக்கள் சார்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வரவேற்றுள்ளார்.

சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்கின்றார்கள்.

2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சில்வா சட்டத்திற்குப் புறம்பான சாகடித்தல்களை நடத்துமாறு ஆணையிட்டார் என்பதற்கு ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை சனல் 4 ஆவணப்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி மூலம் தரப்பட்ட அதன் அறிக்கையில், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அனுப்பிய ஆணையை சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது படையணி அலுவலர்களுக்கு மறு ஒலிபரப்பு செய்தார். சில்வாவின் கட்டளையானது தமிழ் மக்களின் பாரிய எண்ணிக்கையிலான படுகொலைகளுக்கு இடமளித்தது. 

சில்வாக்கெதிரான அமெரிக்காவின் பயணத்தடை மற்றைய நாடுகளும் பின்பற்றக் கூடிய ஒரு காரியமாக அமைகின்றது. இலங்கையில் படையணியினரால் ஆற்றப்பட்ட போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக சர்வதேச நாடுகள் வழக்குத் தொடர வேண்டிய அத்தியாவசிய கடப்;பாட்டினை இந்தக் காரியம் கோடிட்டுக் காட்டுகிறது.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் தொடர் தீர்மானங்கள் பலவற்றை ஸ்ரீ லங்கா தொடர்ந்து நடைமுறைப்படுத்த மறுத்துவந்துள்ளது. அந்தத் தீர்மானங்கள் கலப்பு முறையான நீதிமன்றங்களை உருவாக்கி போர்க்குற்றவாளிகளை விசாரித்து தீர்ப்பு வழங்க வலியுறுத்தி வந்துள்ளன.

சில்வாவை ஒரு துணிச்சலான வீரன் என்று பூச்சடிக்கப் பார்ப்போர், அப்பாவிப் பொது மக்களுக்கு வேண்டுமென்றே பொய்யாகப் பயங்கரவாதிகள் பட்டம் சூட்டிக் கொன்று தீர்த்தமை துணிச்சல் என்ற வார்த்தைக்குள்ளும் வீரத்தினுள்ளும் எவ்விதத்திலேனும் அடங்காதென்பதை உணர வேண்டும். துல்லியமான குற்றரீதியான பொறுப்புகளை சுமப்பவர்கள் என்று தெளிவாகக் காணப்படும் படையணியினர் யாவரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கட்டாயமாக விசாரிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது அவ்வாறு விசாரிக்க வல்ல நியாயாதிக்கத்தினைக் கொண்ட மன்றமொன்றினால் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்.

தொடர்ந்து வந்த மூன்று அரசாங்கங்கள் பத்து வருடங்களுக்கு மேலாக குற்றங்களை விசாரிப்பதைத் தட்டிக் கழித்து வந்ததில் இப்பொழுதாவது சட்டத்தின் அதிகாரம் கட்டாயமாக நிலைநிறுத்தப்பட வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் ஒரு முக்கிய கட்டம் தற்பொது பரிணமித்துள்ளதெனவும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email