SHARE
image_pdfPRINT

சுவிட்சர்லாந்து மறுக்கவேண்டும் – ஜஸ்மின் சூக்காக

ஜெனிவாவிற்கான இலங்கை தூதுவராக தெரிவிசெய்யப்பட்டுள்ள கொலைக்குற்றவாளியான சி.ஏ. சந்திரபிறேமாவுக்கான அங்கீகாரத்தை சுவிட்சர்லாந்து மறுக்கவேண்டுமென ITJP யின் நிறைவேற்று பணிபப்பளர் ஜஸ்மின் சூக்காக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை அரசின் அனுசரணையுடன் 1980 களில் தமிழர்களுக்கு எதிரான கொலைகளை முன்னெடுத்த மக்கள் புரட்சிகர சிவப்பு இராணுவத்தின் ( PRRA) உறுப்பினர் சி.ஏ. சந்திரபிறேமா இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ITJP மற்றும் இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பு (JDS) ஆகியன இணைந்து இன்று வெளியிட்டுள்ள கூட்டு ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘தடிப் பிரியந்த’ என அறியப்பட்ட சி.ஏ. சந்திரபிறேமா 40,000 பேர் கொல்லப்பட்ட சிங்கள இளைஞர்களின் எழுச்சியின் ஒரு போது சந்தேக நபர்களை இலக்கு வைப்பதற்கு இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய நிழல் ஆயுதக்குழுக்களில் ஒன்றான PRRA இன் முக்கிய உறுப்பினரான இருந்தார்.

அதேவேளை, கொலைகள் மற்றும் வலிந்து காணாமல் போதல்களுடன் குறித்த ஆயுதக்குழு தொடர்புபட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புசபை அக்காலபகுதியில் அறிக்கை வெளியிட்ட போது, அதன் பணியாளர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு குறித் ஆயுதக்குழுவான PRRA கொலை மிரட்டல்களை விடுத்திருந்தது.

தவிர, கடந்த 1989 இல் சரித்த லங்காபுர மற்றும் காஞ்சனா அபயபால ஆகிய இரு மனித உரிமை வழக்கறிஞர்களின் படுகொலை தொடர்பில் சந்திரபிறேமா, 2000 ஆம் ஆண்டு இலங்கையில் கைது செய்யப்பட்டு பின்னர் சட்டமா அதிபரின் தீர்மானத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கத்தை கொண்ட அமைப்பான மனித உரிமைகள் பேரவையில் மனித உரிமை வழக்கறிஞர்களை துணிச்சலாக கொலை செய்வதில் பங்குள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டதற்காக சரியான முறையில் ஒருபோதும் விசாரணை செய்யப்படாத மனிதரை அப்பதவியில் அமரவைப்பது முற்றிலும் முரணானது என ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

மேலும், மனித உரிமைகள் பேரவைக்கு வரும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி மிரட்டும் கடந்தகால வரலாற்றையும் இலங்கை கொண்டுள்ளது. எனவே ஜெனிவாவில் இராஜதந்திர நடவடிக்கையை தலைமைதாங்குவதற்கு அதுபோன்ற மனிதரை வைத்திருப்பது முற்றிலும் பாதுகாப்பானது அல்ல என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை தண்டிக்கப்படாத அரச குற்றம் என்பது கொண்டாடப்பட்ட இலங்கையின் ஜனநாயகத்தின் வெறுப்பூட்டும் அடித்தளமாக உள்ளது என இலங்கையின் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் அமைப்பினைசேர்ந்த பாசன அபயவர்த்தன இக் கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.