SHARE
image_pdfPRINT

அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு இருப்பதாக தெரிவித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி பெற்று அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையாக உள்ள வீட்டில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. குறித்த முகாம் வடமாகாண சபைத் தேர்தலை அடுத்து அகற்றப்பட்டது.

இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீகன், அப்பன் மற்றும் கோபி ஆகிய போராளிகள் 2014ம் ஆண்டு ஏப்ரல் 11ம் திகதி வவுனியாவில் இராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் இந்த வீட்டிலிருந்தே பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் குறித்த வீட்டை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். தற்போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே அந்த வீட்டை தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அதுதொடர்பில் நீதிமன்றின் அனுமதியைப் பெற்று அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு இராணுவத்தினர் அறிவித்திருந்த நிலையிலையே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.