SHARE

அடுத்த கட்ட வழக்கு நடவடிக்கை நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு

கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான ICPPG யின் வழக்கில் மூன்று சாட்சியங்கள் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் ஏனைய சாட்சியங்களின் பதிவு மற்றும் விசாரணைகள் முடிவு பெறும் நிலையில் அன்றைய தினமே இறுதி தீர்ப்பும் வழங்கப்படலாம் என சட்டத்தரணிகளால் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான வழக்கு விசாரணையில் பிரியங்கா பெர்னாண்டோ கழுத்தை அறுப்பேன் என காண்பித்த வீடியோவை பதிவு செய்தவரான சபேஷ்ராஜ் சத்தியமூர்த்தி முதலாவது சாட்சியத்தை பதிவு செய்ததும் மற்றய சாட்சியான கோகுலன் மற்றும் பிரதானசாட்சி மயூரதன் ஆகியோரிடமிருந்தும் இன்று நீதிமன்றில் சாட்சிகள் பெறப்பட்டன.

பிரியங்கா பெர்னாண்டோ தரப்பு வழக்கறிஞரால் சுமார் ஒன்றரை மணி நேரங்களிற்கு மேலாக பிரதான சாட்சியிடம் கேள்விகள் தொடுக்கப்பட்டிருந்த நிலையில் மாலை 4 மணியளவில் வழக்கு நடவடிக்கைகளை இடைநிறுத்திய நீதிபதி எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கு வழக்கின் தீர்ப்பினை ஒத்திவைத்தார்.

இதேவேளை குறித்த வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் நீதிமன்றின் முன் ஒன்று திரண்ட புலம்பெயர் தமிழர்கள் பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யவேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தனர்

கடந்த ஆண்டு (2018) பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவேளை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய பிரியங்கா பெர்ணான்டோ ஆர்பாட்டக்காரர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இராணுவ அதிகாரிக்குரிய உத்தியோக பூர்வ உடையில் தூதரகத்திற்கு வெளியே நின்றிருந்த அவர் ஆர்பாட்டக்காரர்களை பார்த்து கழுத்தை அறுப்பேன் போன்ற சமிக்ஞை ஒன்றை காண்ப்பித்திருந்தார்.

இதனையடுத்து சட்டவாளர் அருண்கணநாதன் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் ஆகியோரின் வழிநடத்தலுடன் ICPPG யினால் அவருக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நடப்பாண்டில் (2019) கடந்த பெப்ரவரி மாதம் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அதில் பிரியங்கா பெர்ணான்டோ மீதான இரு குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் அவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்குஇராஜதந்திர தண்டனை முக்தி இருப்பதாக சிறிலங்கா வெறிவிவகார அமைச்சு, பிரித்தானியவெளிவிவகார அமைச்சின் ஊடாக தெரியப்படுத்திய நிலையில் அவர் மீதான பிடியாணையை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் மீளப் பெற்றுக்கொண்டது.

பின்னர் மார்ச் மாதம் நடைபெற்ற அடுத்தகட்ட வழக்கு விசாரணையில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கடமைகள் தொடர்பில் நீதிமன்றினால் கோரப்பட்டதுடன் அதில் கழுத்தை அறுக்கும் சைகையைகாண்பித்து அச்சுறுத்திய நடவடிக்கை அவரது இராஜதந்திர கடமையுடன் தொடர்பில்லை என்றுநீதிமன்றம் அறிவித்தது.

அதேவேளை, பிரியங்கா தரப்பிலிருந்து ஆஜரான சட்டத்தரணி, வழக்கு விசாரணைக்கு முன்னதாக அனுப்பிவைக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்ற அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என மன்றில் எடுத்துரைத்தார் இதனையடுத்து நீதி மன்றின் மீதான இக் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காது மீண்டும் ஒரு சர்ந்தர்ப்பதை அவர்களுக்கு வழங்க தீர்ப்பினை ஒத்திவைத்தார்

இந்நிலையிலேயே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.


Print Friendly, PDF & Email