SHARE

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கினைப்போல் பிரித்தானியாவிலும் சித்திரவதைகள் தொடர்பான வழக்குகளை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என உண்மை மற்றும் நீதிக்குமான அமைப்பின் பணிப்பாளரும் (ITJP) மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

ITJP யினால் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு குறித்த ஊடக மாநாட்டினைத் தொடர்ந்து நமது ஈழநாடு இணையத்து வழங்கிய விசேட நேர்காணலில் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

ஜஸ்மின் சூக்காவை தலைமையாக்கொண்ட சர்வதேச உண்மைகள் மற்றும் நீதிக்கான அமைப்பும் (ITJP) அமெரிக்காவில் உள்ள ஹோஸ்பெல்ட் என்ற சர்வதேச சட்ட நிறுவனமும்இ மனித உரிமைகள் சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர் என்பவரும் இணைந்து இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சித்திரவதையில் உயிர்தப்பிய தமிழரான றோய் சமத்தானம் என்பவர் சார்பில் கலிபோர்னியாவில் உரிமையியல் பாதிப்பு வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் ‘சித்திரவதைகளை அனுபவித்த நுற்றுக்கு அதிகமானோர் பிரித்தானியாவிலும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அந்தவகையில் சித்திரவதைகள் தொடர்பில் பிரித்தானியாவிலும் வழக்குகளை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என மேற்படி விசேட நேர்காணலில் ஜஸ்மின் சூக்காவிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஜஸ்மின் சூக்கா

நிச்சயமாக அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏனெனில் சித்திரவதைகள் என்பது சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட குற்றச் செயலாகவே கருதப்படுகின்றது.

பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் இவ்வாறு வழக்கு தொடர்வதில் உள்ள வித்தியாசம் என்னவெனில் அமெரிக்காவானது சித்திரவதைகக்கு உள்ளானவர்களை பாதுகாப்பதற்கு என தனியான சட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அந்த சட்டத்தின் படி வழக்கு தொடர்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அந்த நாட்டில் அல்லாது வேறு எந்த நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அந்த சட்டத்தின் கீழ் வழக்கினை தொடரினை முடியும். ஆயினும் சித்திரவதையை செய்தவர் மீது அழைப்பாணையை வழங்க முடியுமான பட்சத்தில் மாத்திரமே வழக்கை தொடர முடியும்.

பிரித்தானியாவிலும் இவ்வாறான பல வெற்றிகரமான வழக்குகள் நடைபெற்றுள்ளன. உதாரணமாக நேபாளத்தை நேர்ந்த கேணல் தரநிலை இராணுவ வீரர் குணால் லாமா என்பவருக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்கு தொடரப்பட்டு அவர் பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த போது கைதுசெய்யப்பட்டார்.

இறுதியில் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் அவர் தப்பித்துக்கொண்டாலும் அவரது வழக்கின் போது ஏராளமான கேள்விகளை வழக்கறிஞர்கள் முன்வைத்தார்கள்.

மேலும் சித்திரவதைகள் தொடர்பாக அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் எல்லா நாடுகளிற்கும் உள்ளது. அதேபோல் சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கும் கடப்பாடும் அதானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈட்டினை பெற்றுக்கொடுக்கும் கடமையும் அந்த நாடுகளுக்கு உள்ளது. ஆயினும் இவ்வாறான வழக்குகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதனை தவிர்க்க முடியாது.

இந்நிலையில், கோத்தபாயவினாலும் அவர்களது காலத்தில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டவர்களும் இவ்வாறு வழக்குகளை தொடர முன்வரலாம் என அவர் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email