SHARE

வவுனியா வடக்கு- ஊற்றுக்குளம் தமிழ் கிராமத்தில் காடு அழிக்கப்பட்டு புத்தர் சிலை ஒன்றும் அதனை சூழ சிங்கள குடும்பங்களை குடியேற்றும் நோக்கில் கொட்டில்களும் அமைக்க ப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நெடுங்கேணி பிரதேசசபையின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சிலர் குறித்த பகுதிக்கு சென்று அங்குள்ள நிலமைகளை அவதானித்துள்ளனர். 

இது குறித்து நெடுங்கேணி பிரதேச சபையின் உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

நெடுங்கேணி பிரதேச  செயலர் பிரிவுக்குட்பட்ட ஊற்றுக்குளம் கிராமம் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீள குடியேறாதபோதும் அங்குள்ள விவசாய நிலங்களில் தமிழ் மக்கள் இன்றளவும் விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஊற்றுக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதியில் திடீரென பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அங்கு விவசாயம் செய்வதற்காக செல்லும் மக்கள் கூறியதை தொடர்ந்து நாம் சென்றிருந்தோம். அங்கு நடு காட்டுக்குள் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு, புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது. 

அதற்கு பௌத்த பிக்கு ஒருவரும் அவருக்கு காவலாளிகள் இருவர் வழங்கப்பட்டு 3 பேர் தங்கியிருக்கின்றனர். அந்த விகாரையை சுற்றிலும் காடுகள் வெட்டப்பட்டு சிறிய கொட்டில்கள் போடப்பட்டு அங்கு பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இது குறித்து வனவள திணைக்களம் எந்த விதமான நடவடிக்கையினையும் எடுக்காத நிலையில் மிக சுதந்திரமாக காடழிக்கப்பட்டு குடியேற்றங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொறுப்புவாய்ந்தவர்கள் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவேண்டும். அதன் ஊடாகவே சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும் என மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email