SHARE
image_pdfPRINT

யாழ்.கொக்குவில் பகுதியில் வாள் வெட்டுக்குழுவை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

கொக்குவில் காந்திஜீ சனசமூக நிலைய பகுதியில் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொள்ளும் நோக்குடன் வந்த குழுவினை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து இன்று மதியம் மடக்கி பிடித்துள்ளனர்.

குறித்த குழுவினர் சுமார் இருபது நவீனரக மோட்டார் சைக்கிளில்களில் 40க்கும் மேற்பட்ட வாள் வெட்டுக்குழு அப்பகுதியில் தாக்குதல் நடத்தும் நோக்குடன் வந்துள்ளது.

அதன் போது அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள் தாக்குதல் மேற்கொள்ள வந்த குழுவை மடக்கி பிடிக்க முற்பட்டுள்ளனர். அப்போது குழுவினர் தப்பி செல்ல முயன்ற போது தமது 7 மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பி ஓடியுள்ளனர். தப்பியோடியவர்களில் நால்வரை ஊரவர்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்துள்ளனர்.

தம்மால் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த நால்வரையும் , மீட்கப்பட்ட 07 மோட்டார் சைக்கிள்களையும் யாழ்ப்பாண பொலிசாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்துள்ளனர்.

அதனை நால்வரையும் கைது செய்ய பொலிசார் ,பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் , மீட்கப்பட்ட 7 மோட்டார் சைக்கிளையும் பொலிஸ் நிலையம் எடுத்து சென்றுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார், தப்பி சென்றவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.